
லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, பாட்மிண்டன், ஹாக்கி என்று மொத்தம் 13 வகையான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இந்தியாவிற்கு 1 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற உள்ளது.
இதில் 55 கிலோ எடை பிரிவின் பிரீ ஸ்டைல் போட்டியில் இந்திய வீராங்கனை கீதா போஹத் இன்று பங்கேற்க உள்ளார். அவர் முதல் போட்டியில் கனடா வீராங்கனை லைன் வெர்பீக் டோன்யா உடன் மோத உள்ளார். இந்த போட்டி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
கீதா பங்கேற்கும் பிரிவின் அனைத்து போட்டிகளும் இன்றே முடிவடைந்து, பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் கிடைக்குமா என்பது இன்றே தெரிந்துவிடும்.
மற்ற போட்டிகள்:
மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ள பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை டின்டு லுகா கலந்து கொள்ள உள்ளார். அதேபோல மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா வீராங்கனை சஹானா குமாரி பங்கேற்க உள்ளார்.