சென்னை: 3வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியின் பான் நகரில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில், ரஷ்ய வீரர் விலாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த். இது அவர் வெல்லும் 3வது உலக சாம்பியன் பட்டமாகும். பட்டம் வென்று 24 நாட்கள் கழித்து நேற்று நள்ளிரவில் ஆனந்த் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில், தமிழ்நாடு செஸ் சங்கம், அகில இந்திய செஸ் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. லூப்தன்சா விமானம் மூலம் மனைவி அருணாவுடன் சென்னை திரும்பிய ஆனந்த் சிறப்பாக வரவேற்கப்பட்டார். ஆனந்த்துக்கும், அருணாவுக்கும், பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. நாதஸ்வரம் முழங்க வரவேற்பளிக்கப்பட்ட இருவருக்கும், வேலம்மாள் குழும பள்ளி மாணவ, மாணவியர், நிட் மாணவர்கள் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி வரவேற்பு அளித்தன். ஆனந்த்தின் பெற்றோர் விஸ்வநாதனும், சுசீலாவும் விமான நிலையத்திற்கு வந்திருந்து தங்களது மகனையும், மருமகளையும் வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். டிசம்பர் 11ம் தேதி ஆனந்த்துக்கு பிறந்த நாள் ஆகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஆண்டு தனது பிறந்த நாளை குடும்பத்தினரோடு சென்னையிலேயே கொண்டாடவுள்ளார் ஆனந்த்.