
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் அணிகள் அணிவகுப்பின் போது, ஒவ்வொரு நாடுகளின் தேசிய கொடியை ஒரு வீரர் ஏந்தி செல்வது வழக்கம்.
இதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ள 80 பேரில், தேசிய கொடியை ஏந்தி செல்ல 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, அதே ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங், மல்யுத்த வீரர் சுசில் குமார் மற்றும் கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகிய 4 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இதில் லியாண்டர் பயஸ் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி சென்றுள்ளார். துவக்க விழாவிற்கு அடுத்த நாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தரும், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் தேர்வு செய்யப்பட்ட 4 பேரில், மல்யுத்த வீரர் சுசில் குமார் தேசிய கொடியை ஏந்தி செல்ல அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.