டெல்லி: சூதாட்டத்தில் சிக்கியதால் கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப் பட்ட வீரர் ஸ்ரீசாந்த். இவர் தற்போது இந்திப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கு கேபரே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். இவர் கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப் பட்டது.
இந்நிலையில், தற்போது 'கேபரே' என்ற இந்திப் படம் ஒன்றில் அறிமுகமாகிறார் ஸ்ரீசாந்த். இப்படத்தில் மலையாள அறிவுரையாளர் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடிக்கிறார். இப்படத்தை கெளஸ்தவ் நாராணன் நியோகி இயக்குகிறார்.
ஏற்கனவே, டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவில் பிரமாதமாக நடனம் ஆடியதாக பாராட்டுகளைப் பெற்றவர் ஸ்ரீசாந்த். நடனத்தோடு, நடிப்பாற்றலும் இருப்பதாலேயே ஸ்ரீசாந்த், நடிக்க ஒப்புக் கொண்டதாக இப்படத்தின் தயாரிப்பாளர் பூஜாபட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்துக்கு தற்போது 31 வயதாகிறது. எனவே, கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், சினிமாவில் அவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
கேபரே நடனம் குறித்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.