மும்பை: ரியோ டீ ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியை, இந்திய ரசிகர்கள் முழுமையாக ஸாட்ர் ஸ்போர்ட்ஸ் சானலில் நேரடியாகப் பார்த்து ரசிக்க அந்த டிவி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளை விரிவான முறையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் ஜாம்பவான் இயான் தோர்ப் வர்னணையாளராக செயல்படவுள்ளார்.
இந்திய ரசிகர்கள் இந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக உடனுக்குடன் காண முடியும் என்பது விசேஷமாகும்.
தோர்ப் 2 ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கம் வென்ற சாதனையாளர். அது மட்டுமல்லாமல், 11 உலக பட்டங்களையும் வென்ற நீச்சல் மன்னன். இவர் தவிர இந்திய ஜாம்பவான்களும் நேரடி ஒளிபரப்பில் இணையவுள்ளனர்.
இந்திய பேட்மிண்டன் சாதனையாளர் பிரகாஷ் படுகோனே முன்னாள் காமன்வெல்த் மகளிர் துப்பாக்கிச் சுடும் சாம்பியன் அஞ்சலி பகவத், முன்னாள் ஹாக்கி வீரர் விரேன் ரஸ்கின், நீச்சல் சாம்பியன் ரேஹான் போன்சா ஆகியோரும் வர்னணையாளர்களாக செயல்படவுள்ளனர்.
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் எட்டு சேனல்களில் இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பவுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் வர்னணை இருக்கும்.