மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது இந்திய வேகப் பந்து வீச்சாளர் வருண் ஆரோன் வீசிய பந்து, ஸ்டூவர்ட் பிராடின் மூக்கைப் பதம் பார்த்து ரத்தம் வர வைத்து விட்டது.
மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் பிராட் பேட்டிங்கை பாதியிலேயே கைவிட்டு ரிடையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.
3வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பேட்டிங் செய்த பிராட், வருண் ஆரோன் வீசிய 2 பவுன்சர்களை அழகாக சிக்ஸருக்கு விரட்டினார். ஆனால் 3வது பவுன்சரை அவர் சந்தித்தபோது அது அவரது மூக்கில் பலமாக பட்டுத் தாக்கியது. இதில் அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக இங்கிலாந்து அணியின் பிசியோ தெரப்பிஸ்ட்டை நோக்கி அவர் கையைக் காட்டி வருமாறு அழைத்தார். பல நிமிடம் மைதானத்திலேயே மூக்கைச் சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் ரத்தம் வருவது நிற்கவில்லை. இதையடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார் பிராட். அவர் 12 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர் இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது பிராட் பந்து வீச வரவில்லை. ஆனாலும் இந்தியாவுக்குப் போதுமான பாதகத்தை ஜேம்ஸ் ஆண்டர்சனும், மற்றவர்களும் ஏற்படுத்தி கதையை முடித்து வைத்தனர்.