
1996க்கு பிறகு
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சுமித் நாகல் (23) உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இதில், இஸ்டோமினை 6-4, 6-7 (6), 6-4 என்ற செட் கணக்கில் சுமித் வீழ்த்தினார். இதன் மூலம், 1996 க்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஒற்றையர் போட்டியில் வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை அவர் புரிந்தார்.

25 ஆண்டுகால காத்திருப்பு
இந்த வெற்றியை பெற அவருக்கு இரண்டு மணி நேரம் 34 நிமிடங்கள் தேவைப்பட்டது. சற்று நீளமான போட்டி தான். எதிரணி வீரர் கடும் சவால் அளித்தார். எனினும், இறுதியில் சுமித் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு சுமித் முற்றுப்புள்ளி வைத்தார்.

மகிழ்ச்சியா? அவலமா?
கடைசியாக, கடந்த 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்றபோது சுமித் நாகல் பிறக்கவேயில்லை. அவர் பிறந்து ஆளாகி, ஒலிம்பிக்கில் தகுதிப் பெற்று, இன்று வெற்றிப் பெறும் வரை இந்தியா காத்திருக்க நேரிட்டிருக்கிறது. இதை மகிழ்ச்சியாக பார்ப்பதா, இல்லை இந்தியாவின் அவலமாக பார்ப்பதா என்றும் தெரியவில்லை. எனினும், ஜெயித்துவிட்டோம். அந்த வகையில் மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறது.

கொண்டாடுவோம்
இந்தியா சார்பில் முதன் முதலாக, 1988ம் ஆண்டு நடைபெற்ற சியோல் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் ஜீஷன் அலி, டென்னிஸ் விளையாட்டில் ஒற்றையர் பிரிவில் முதல் வெற்றியைப் பெற்றார். அதன் பிறகு லியாண்டர் பயஸ் ஜெயிக்க, அவருக்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து சுமித் நாகல் இன்று ஒலிம்பிக் போட்டியில் வென்றிருக்கிறார். வாழ்த்துகள் சகோ!


Click it and Unblock the Notifications











