ஸ்வப்னாவுக்கு ஷூ வழங்க விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை.. விரைவில் கிடைக்கும்
டெல்லி : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்வப்னா பர்மன் ஹெப்டாத்லான் போட்டியில் தங்கம் வென்றார். அவருக்கு ஒவ்வொரு கால்களிலும் ஆறு விரல்கள் இருக்கும் நிலையில், அதற்கேற்ற ஷூ கிடைக்காமல் தான் அவதிப்பட்டு வருவதாக கூறி இருந்தார் அவர்.
இந்த நிலையில், அவருக்கு ஷூ கிடைக்க உள்ளது. இதற்கான ஏற்பாட்டை இந்திய விளையாட்டு அமைச்சகம் செய்துள்ளது. இது பற்றி ஸ்வப்னாவின் பயிற்சியாளருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி பேசிய அதிகாரி ஒருவர், "ஸ்வப்னாவின் நிலை பற்றி தெரிந்த உடன் விளையாட்டு அமைச்சர் எங்களுக்கு இதுபற்றி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நாங்கள் அடிடாஸ் கம்பெனியில் கேட்டோம். அவர்கள் பிரத்யேக ஷூ தயாரித்து தர ஒப்புக் கொண்டுள்ளனர்" என கூறினார்.
இது பற்றி ஸ்வப்னாவின் பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கூறுகையில், "ஸ்வப்னா தற்போது காயத்தில் இருக்கிறார். எனவே, காயம் குணமான உடன் நாங்கள் அடுத்த கட்ட தகவலைப் பற்றி கூறுகிறோம். இப்போது ஸ்வப்னா தங்கம் வென்று விட்ட நிலையில் ஒவ்வொரு கம்பெனியும் அவரை அணுக முயல்கிறது" என்ற கூடுதல் தகவலையும் அளித்தார்.
இதற்கு முன் ஸ்வப்னாவுக்கு சென்னையை சேர்ந்த ICF நிறுவனம் உதவ முன்வந்தது. தற்போது விளையாட்டு அமைச்சகமே தலையிட்டு இந்த பிரச்சனையை முடித்துள்ளது.


Click it and Unblock the Notifications