டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடும் விதிமுறைகள் அமலில் உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் லாக்டவுன் அமலில் உள்ளது.

பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் கூட சோசியல் டிஸ்டன்சிங் கடுமையாக அமலில் உள்ளது. அப்படி ஒரு நாடான தைவானில் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சீனாவுக்கு நெருக்கமான நாடாக இருந்தாலும், கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் பார்த்துக் கொண்டது தைவான். வெறும் 422 பேருக்கு மட்டுமே பாதிப்பு, 6 பேர் மட்டுமே பலி என மற்ற நாடுகளை விட ஓரளவு பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது தைவான்.
அதனால் இயல்பு நிலைக்கு கொஞ்சம், கொஞ்சமாக வரலாம் என நினைத்து இருந்தனர். அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டின் பிரபல பேஸ்பால் லீக் தொடருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ப்யூபான் கார்டியன்ஸ் - ராகுட்டன் மங்கிஸ் அணிகள் மோதின. அப்போது ப்யூபான் அணி வீரர் பந்தை எடுத்து எதிரணி வீரர் குயோ என்-வென் மீது வீசினார்.

அவர்கள் இருவரும் உடனே மோதலில் ஈடுபட, அதைக் கண்ட இரு அணி வீரர்களும் வேகமாக ஓடி களத்துக்குள் வந்தனர். ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுக் கொண்டு கூடி நின்று சண்டையிட்டனர். அந்தக் காட்சியை கண்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா வைரஸ் நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் அதிகமாக பரவும் என கூறப்படும் நிலையில், அதெல்லாம் கண்டு கொள்ளாமல் பேஸ்பால் வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டது அதிர்ச்சி சம்பவமாக அமைந்தது.