இன்டோர் ஷாட் புட்: 18 மீட்டரைக் கடந்து சாதனை படைத்த கிருஷ்ணா ஜெயசங்கர்! தமிழக வீராங்கனை அபாரம்
அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் புதிய சாதனைப் படைத்துள்ளார். பெண்களுக்கான இன்டோர் ஷாட் புட் (Indoor Shot Put) போட்டியில், 18.03 மீட்டர் தூரம் குண்டை எறிந்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இன்டோர் ஷாட் புட் வரலாற்றில் 18 மீட்டர் இலக்கைக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் தனதாக்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 23 வயதான கிருஷ்ணா ஜெயசங்கர், சர்வதேச அளவில் இந்தியாவின் மிகச்சிறந்த தடகள நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். விளையாட்டுப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இவரின் தந்தை ஜெயசங்கர் மேனன் மற்றும் தாய் பிரசன்னா மேனன் ஆகிய இருவருமே இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் (UTEP) படித்துக்கொண்டே, அங்குள்ள அதிநவீன வசதிகளுடன் தனது தடகளப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.பெற்றோரின் வழியில் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டாமல், தனது கடின உழைப்பால் ஷாட் புட் பிரிவைத் தேர்ந்தெடுத்து தற்போது உலக அரங்கில் இந்தியாவின் கொடியைப் பறக்கவிட்டுள்ளார்.
இதன் மூலம் இன்டோர் ஷாட் புட்டில் 18 மீட்டரைக் கடந்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். தொடர்ச்சியான சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்து வரும் கிருஷ்ணா ஜெயசங்கர், இந்திய தடகளத் துறையின் பிரகாசமான எதிர்காலமாகத் திகழ்கிறார். இவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சர்வதேச அரங்கில் 18.03 மீட்டர் எறிந்து சாதனை படைப்பதற்கு முன்பே, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிருஷ்ணா பல முக்கியப் பதக்கங்களையும் சாதனைகளையும் குவித்துள்ளார். ஜூனியர் மற்றும் தேசிய அளவிலான சாதனைகள் படைத்திருக்கிறார்.
தனது ஆரம்பக் காலத்தில் தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளில் ஷாட் புட் மற்றும் வட்டு எறிதல் (Discus Throw) ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
இந்தியாவில் உள்ளூர் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பலமுறை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்கா பல்கலைக்கழக தடகளப் போட்டிகள் (NCAA) அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு இவரது ஆட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.அமெரிக்காவின் 'கான்ஃபரன்ஸ் யுஎஸ்ஏ' (Conference USA) தடகளப் போட்டிகளில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்று, ஷாட் புட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த 18.03 மீட்டர் சாதனைக்கு முன்பு வரை, இவரின் சிறந்த இன்டோர் எறிதல் தூரம் 16 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. தற்போதைய தொடரில் தனது முந்தைய சாதனைகளை அவரே முறியடித்துள்ளார். பெண்களுக்கான அவுட்டோர் (Outdoor) ஷாட் புட் போட்டிகளில் இந்தியாவின் மன்பிரீத் கவுர், அபா காதுவா போன்ற வீராங்கனைகள் 18 மீட்டர் இலக்கைக் கடந்துள்ளனர்.
ஆனால், இன்டோர் (Indoor Shot Put) போட்டிகளில் 18 மீட்டரைத் தாண்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமை இனி கிருஷ்ணா ஜெயசங்கருக்கு மட்டுமே உரியது.தனது 23 வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த வீராங்கனைகளுக்கு இணையாக முன்னேறியுள்ள கிருஷ்ணா, விரைவில் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

