மும்பை: கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக சிக்கிய இலங்கை அணி போல, புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியும் மாட்டியுள்ளது.
லீக் போட்டியில், தெலுகு டைட்டன்ஸ் அணி 33-28 என வென்றது. இருப்பினும் நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி சற்று போராட்டத்தை காட்டியது பாராட்டுக்குரியது.
புரோ கபடி லீக், 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன.
மொத்தம், 119 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், நேற்று முன்தினத்துடன், 55 போட்டிகள் முடிந்துள்ளன.
மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், சில போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியும், தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதின.
துவக்கத்தில் இரு அணிகளும் சமபலத்துடன், விட்டுக் கொடுக்காமல் ஆடின. இரு அணிகளும் மாறி மாறி, டேக்கிள் செய்வதில் புள்ளிகள் எடுத்து வந்ததால், ரெய்டு செல்வோருக்கு கடினமாகவே இருந்தது. எட்டாவது நிமிடத்தில் 5-5 என, சமநிலை இருந்தது. 11வது நிமிடத்தில் தெலுகு டைட்டன்ஸ், 7-6 என முன்னிலை பெற்று வந்தது.
இரு அணிகளின் தடுப்பாட்டக்காரர்கள் மிகச் சிறப்பாகவே இருந்தது. இதுவரை இல்லாத ஒரு புது வேகத்துடன் தமிழ் தலைவாஸ் அணி விளையாடியது.
இந்திய அணியின் முக்கிய வீரரான அஜய் தாகூர் போன்ற வீரர்கள் இருந்தாலும், முதல் முறையாக புரோ கபடி லீக் போட்டியில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி சரியாக சோபிக்கவில்லை. கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் இந்த அணி, இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரெய்டு மூலம் 16 புள்ளிகளை எடுத்தாலும், டேக்கிள் செய்வதில், தெலுகு டைட்டன்ஸ் அணி பெற்ற புள்ளிகளில் பாதியைத்தான் பெற்றது.
முதல் பாதி இறுதியில், 12-9 என தெலுகு டைட்டன்ஸ் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ், 19 புள்ளிகளைப் பெற்றது. அதே நேரத்தில், தெலுகு டைட்டன்ஸ் அணி, 21 புள்ளிகளைப் பெற்றது. இறுதியில் 33-28 என தெலுகு டைட்ன்ஸ் அணி வென்றது. அந்த அணியின் இளம் வீரர் சோம்பிர், அதிகபட்சமாக, 10 புள்ளிகளை பெற்றார்.