
துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா ( வயது 11 ). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற இவர் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல், ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
சில பயிற்சிகள் கடினமாக இருந்தாலும் தனது பெற்றோர் லட்சுமிநாராயணன் - ஸ்ரீவித்யா, பயிற்சியாளர் பென்னி ஜோசப் மற்றும் பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் தனக்கு பெரும் உற்சாகமும், ஆதரவும் அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீச்சல் பயிற்சிகளுக்கான உடை உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தனது பெற்றோரே செலவு செய்து வருவதாகவும், நீச்சல் பயிற்சிகளுக்கு ஏதேனும் பெரிய நிறுவனங்கள் உதவிட முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் அம்மாணவி தெரிவித்துள்ளார்.