தோஹா: கத்தாரில் நடைபெற்ற மகளிருக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக வீராங்கனை அனுப்பமா ராமச்சந்திரன் முதல் முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
கத்தாரில் உள்ள தோகாவில் நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த மூன்று முறை உலக சாம்பியனான ஆன் ஈயை அனுப்பமா ராமச்சந்திரன் எதிர்கொண்டார். 5 செட்டுகள் கொண்ட இந்த போட்டியில் இரு வீராங்கனைகளும் தலா இரண்டு செட்களை வென்றனர்.

இந்த நிலையில் போட்டியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இரு வீராங்கனைகளும் சமநிலையில் இருந்தனர். அப்போது ஹாங்காங் வீராங்கனை தமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பை வீணடிக்க அனுப்பமா கடைசி புள்ளியை பெற்று சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றார்.
இதன் மூலம் மூன்றுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் அனுப்பமா கைப்பற்றினார். ஏற்கனவே அரை இறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுப்பமாவும், கீர்த்தனா பாண்டியனும் பலபரிட்சை நடத்தினர். இரண்டு தமிழக வீராங்கனைகள் உலக அளவில் அரை இறுதியில் மோதியது, தமிழக விளையாட்டு துறைக்கு மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. இதில் அனுபமா மூன்றுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் கீர்த்தனா பாண்டியனை வீழ்த்தி இறுதிக்கு வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 23 வயதே ஆன சென்னை சேர்ந்த அனுபமா ராமச்சந்திரன் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதேபோன்று மகளிருக்கான உலக பில்லியட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக வீராங்கனை ஆன சுருதி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ள அனுப்புமாவுக்கும், ஸ்ருதிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இது தமிழ்நாட்டுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.
இதில் அனுப்பமாவுக்கு தமிழக அரசு சிறப்பு ஊக்கத் தொகையை அளித்து வருகிறது. தற்போது அவர் படைத்துள்ள சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது. இருவரும் தமிழ்நாட்டிற்கு மென்மேலும் பல பட்டங்களை வென்று தரவேண்டும் என தான் வாழ்த்துகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.