சென்னை: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர், தடை செய்யப்பட்ட 'ட்ரோஸ்டனோலோன்' ஊக்கமருந்தை இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியது சோதனையில் உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஜூலை 27 அன்று நடந்த இந்திய ஓபன் தடகளப் போட்டியில் சேகரிக்கப்பட்டன.
இந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதிதான் தனலட்சுமி முந்தைய இடைநீக்கத்திலிருந்து திரும்பினார். பத்து நாட்களுக்குள்ளாகவே, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் (NADA) பிடியில் மீண்டும் சிக்கினார். சங்ரூரில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் 11.55 வினாடிகளில் வெற்றி பெற்றார்.

இது குறித்து தேசிய ஊக்கு மருந்து எதிர்ப்பு நிறுவனம், விசாரணை நடத்தியது. இது தற்செயலான" பயன்பாடு நிரூபிக்கப்படவில்லை. இதனால், இரண்டாவது ஊக்கமருந்து குற்றத்திற்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022 ஜூலையில் தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். உலக தடகளத்தின் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (AIU) அன்டலியாவில் நடத்திய போட்டிக்கு அப்பாற்பட்ட சோதனையிலும், NADA-வும் இதை உறுதிப்படுத்தின. அப்போது மெத்தாண்டினோன் என்ற ஸ்டீராய்டுக்காக அவர் சிக்கினார்.
ட்ரோஸ்டனோலோன் (drostanolone) தசையை அதிகரிக்கும், பலத்தை மேம்படுத்தும், கொழுப்பைக் குறைக்கும் ஒரு ஸ்டீராய்டு. அனைத்து ஸ்டீராய்டுகள் போலவும், இது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியால் (WADA) தடை செய்யப்பட்டுள்ளது. இது செயல்திறனை செயற்கையாக மேம்படுத்துவதோடு, ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
இது ஒரு துணை உணவிலிருந்தோ, மருத்துவர் பரிந்துரைத்த மருந்திலிருந்தோ, உணவுடன் தற்செயலாக கலந்திருந்தோ, அல்லது உணவு "சதி செய்யப்பட்டோ" கொடுக்கப்பட்டது என நிரூபித்தால் மட்டுமே குறைந்த தண்டனைக்கு வாய்ப்பாக இருந்திருக்கும். தனலட்சுமி ஜூலை 19 அன்று சேலத்தில் நடந்த தமிழ்நாடு மாநிலப் போட்டியில் 100 மீட்டரை 11.34 வினாடிகளில் கடந்தும், 200 மீட்டரை 23.16 வினாடிகளில் வென்றும் "ஸ்பிரிண்ட் டபுள்" சாதனை படைத்தார்.
ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 11.36 மற்றும் 23.53 வினாடிகளில் ஓடி "ஸ்பிரிண்ட் டபுள்" பட்டம் வென்றார். மேலும், தமிழ்நாடு ஸ்பிரிண்ட் ரிலே அணியிலும் தங்கம் வென்றார்.
2021-ல் பாட்டியாலாவில் 4x100 மீ ரிலே போட்டியில் 43.37 வினாடிகளில் ஓடி தேசிய சாதனை படைத்த அணியில் ஒருவராக இருந்த தனலட்சுமி, மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கும் சூழலில், இன்னொரு ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.குற்றச்சாட்டை 20 நாட்களுக்குள் ஒப்புக்கொண்டால், நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான தடைக்காலத்தை ஓராண்டு குறைக்க ஒரு விதிமுறை உண்டு. ஆனால் தனலெட்சுமி குற்றத்தை ஏற்காததால், இரண்டாவது குற்றத்திற்கு எட்டு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.