பெக்கு: அசர்பைஜானில் செஸ் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை செஸ் தொடர், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் சர்வதேச அளவில் 206 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் செஸ் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கவனம் முழுவதும் அசர்பைஜானில் குவிந்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் முன்னேறி இருந்தனர்.

இதில் நம்பர் 1 வீரரான கார்சல்னை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். அதில் கார்லன் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா - அர்ஜுன் இருவரும் மோதினர். இதில் முதல் சுற்றில் அர்ஜுன் வென்ற நிலையில், இரண்டாவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றார். இதனால் ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது.
இந்த டை பிரேக்கர் ஆட்டம் ரேபிட் செஸ் முறையில் நடத்தப்பட்டது. ரேபிட் செஸ் ஆட்டம் என்பது அதிவேகமாக காய்களை நகர்த்து வெற்றிபெற வேண்டும். இதில் முதல் இரு ஆட்டங்களில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் 10 வினாடிகள் வழங்கப்பட்டது. இதில் இரு போட்டிகளுமே டிராவில் முடிவடைந்தன. இதையடுத்து 3 மற்றும் 4வது டை பிரேக்கர் ஆட்டம் இரு வீரர்களுக்கு தலா 10 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கு 10 வினாடிகள் நேரம் வழங்கப்பட்டது.
அதில் 3வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றிபெற, 4வது சுற்றில் அர்ஜுன் பதிலடி கொடுத்தார். இப்போதும் ஆட்டம் சமநிலையில் இருந்ததால், அடுத்த டை பிரேக்கர் ஆட்டம் 5 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. அதில் இரு வீரர்களுக்கு தலா 5 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கு 3 வினாடிகள் கூடுதலாக வழங்கப்பட்டது.

5வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றிபெற, 6வது ஆட்டத்தில் அர்ஜுன் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்போதும் ஆட்டம் 4-4 என்று சமனில் இருந்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க Sudden Death முறை கொண்டு வரப்பட்டது. அதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தனது மேஜிக்கை நிகழ்த்தி அசத்தினார். இதன் மூலம் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார்.
இந்தியாவின் இரு இளம் வீரர்களும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து உலகக்கோப்பைத் தொடரில் அசத்தியுள்ளனர். இதனால் பல்வேறு தரப்பினரும் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர். செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில் அசர்பைஜானின் ஃபேபியானோவை எதிர்கொள்ள உள்ளார்.