ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தில் 55.42 வினாடிகளில் கடந்து, பிடி உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இன்று காலை மகளிருக்கான 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார். இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதி ஆட்டத்தில் பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார் வித்யா ராம்ராஜ்.

இதன் மூலம் இந்திய விளையாட்டு ஜாம்பவான் பிடி உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார். 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிடி உஷா 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் 55.42 வினாடிகளில் கடந்தார். இந்திய வீராங்கனைகளில் பிடி உஷாவின் இந்த ஓட்டமே இதுவரை சாதனையாக இருந்தது. இதனை தமிழக வீராங்கனை வித்யா சமன் செய்துள்ளார்.
இவருக்கு பிடி உஷாவின் சாதனையை தகர்க்க இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை நடக்கவுள்ள 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டிக்கான இறுதிச்சுற்றுக்கு வித்யா ராம்ராஜ் முன்னேறியுள்ளார். இதனால் புதிய சாதனையை நாளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வித்யா ராம்ராஜ் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார்.
கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், தடகளத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு சகோதரி நித்யா இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஒரே வீட்டில் இருந்து சகோதரிகள் இருவரும் இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.