ஈரோடு : தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் இனியன் இந்தியாவின் 61வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். பதினாறு வயது இனியன் ஈரோட்டை சேர்ந்தவர் ஆவார்.
ஃபிரான்ஸில் நடைபெற்ற நோய்சல் ஓபன் செஸ் தொடரில் தான் இனியன் இந்த பட்டத்தை வென்றுள்ளார். செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல மூன்று ஜிஎம் நார்ம் வெற்றிகளை பெற வேண்டும். எட்டு மாதங்களுக்கு முன்பே அந்த மூன்று வெற்றிகளை பெற்று விட்டார் இனியன்.

எனினும், கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல, செஸ் வீரர்களுக்கான ஈலோ ரேட்டிங்கில் 2500க்கு மேல் புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.
அந்த ரேட்டிங்கில் இனியன் 2485 முதல் 2495க்குள் புள்ளிகளை பெற்று வந்தார். கடும் போராட்டத்துக்கு பின்னர் ஃபிரான்ஸில் நடந்த தொடரின் ஆறாம் சுற்றில் உக்ரைன் நாட்டின் கிராண்ட்மாஸ்டர் செர்ஜி ஃபெடோர்சக்-கை வெற்றி கொண்டு 2500 புள்ளிகளை பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினர். அவர்களைத் தொடர்ந்து இனியன் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.
இனியன் பட்டம் வென்றது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள விஸ்வநாதன் ஆனந்த். "1987இல் இந்தியாவில் ஒரு கிராண்ட்மாஸ்டர் கிடைக்க மாட்டாரா? என்ற ஏக்கம் இருந்தது. இப்போது மாதத்திற்கு ஒரு கிராண்ட்மாஸ்டர் உருவாகி வருவார்கள் போல" என குறிப்பிட்டுள்ளார்.