கொல்கத்தா : உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக பிரக்யானந்தா தற்போது பாரம்பரியமிக்க டாட்டா ஸ்டீல் செஸ் இந்தியா என்ற தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் உலகில் உள்ள முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் ராபிட் செஸ் பிரிவில் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பிரக்ஞானந்தா, முகேஷ் மற்றும் விதித் குஜராத்தி விளையாடி வருகிறார்கள்.

இந்தத் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் குகேஷ் சகநாட்டு வீரரான விதித் குஜராத்தியிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு சரிந்தார். இதேபோன்று தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும் இந்த தொடரில் இரண்டாவது தோல்வியை தழுவினார்.நேற்று ஜெர்மனி வீரர் கிரேமர் உடன் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவிய நிலையில் இன்று உஸ்பெகிஸ்தான் வீரர் நொடிர்பேக்கை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் உடன் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார். சுமார் 66 நகர்த்தலுக்கு பிறகு இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் அதிவிரைவு செஸ் போட்டியின் உலக சாம்பியனான பிரான்ஸ் வீரர் மேக்சிமி 4.5 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் அசர்பைஜான் வீரர் தேய்மோர் 4 புள்ளிகளுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் தமிழக வீரர் குகேஷும், நான்காவது இடத்தில் பிரக்ஞானந்தாவும் ஐந்தாவது இடத்தில் விதித் குஜராத்தியும் இருக்கிறார்கள் .இன்னும் மூன்று சுற்று ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இதில் அனைத்திலும் பிரக்ஞானந்தா குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஓய்வே இல்லாமல் பிரக்ஞானந்தா தொடர்ந்து விளையாடி வருவது அவருடைய ஆட்டத்திறனை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.