பாங்காக்: உலகின் மிகவும் பிரபலமான தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் முதல் முறையாக தங்கம் வென்றது இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
சர்வதேச நாடுகளுக்கிடையே பேட்மிண்டன் தொடருக்கான ஒரு திருவிழாவை போன்று தாமஸ் கோப்பை தொடர் நடத்தப்படும்.
இந்தாண்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
ஆண்களுக்கான பிரிவில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி நேற்று அரையிறுதியில் 3-2 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் மற்றும் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தோனேஷிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது இந்தியாவின் கனவாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அந்த கனவு நிறைவேறியுள்ளது. இதற்கு முன்னாள் பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.