சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தியாவில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எட்டு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம், சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியம், அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியம் ஆகியவற்றை தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 போட்டிகள் இங்கு நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், வருகிற 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மேலும் இங்கு ஒரு அரை இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பங்கு பெறும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே ஸ்டேடியத்துக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 500 போலீஸாரை நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இது ஆயிரம் போலீஸாராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் பகுதிகளில் உள்ள விடுதிகள், மேன்ஷன்கள் உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களிடமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
Story first published: Thursday, June 7, 2012, 11:59 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications