பிரிஸ்பேன்: அடாது மழை விடாது பெய்ததால் ஆஸ்திரேலியா, வங்கதேசம் நடுவேயான போட்டி டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வங்கதேசம் தனது முதல் போட்டியில், 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

வங்கதேசம் கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய விதத்தை பார்த்தாலும், வங்கதேசம் எழுச்சி பெற்றதாகவே தெரிந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பிரிஸ்பேனில் தொடங்கும் ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால் புயல் மழை காரணமாக மதியம் 12.15 மணியாகியும் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை. மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த பிரிவில் 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகியவை 2வது இடத்தை பகிர்ந்தபடியும் உள்ளன. வங்கதேசத்துக்கு கிடைத்த புள்ளியால் இங்கிலாந்துக்குதான் நெருக்கடி அதிகரித்துள்ளது. அந்த அணி இதுவரை ஆடிய இரு போட்டிகளிலும் தோற்றுள்ளது.