நியூயார்க்: டென்மார்க் நாட்டைச் சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி பெரும் வேதனையிலும் அதிர்ச்சியிலும் உள்ளார். அவரது காதலர் திடீரென திருமணத்தையும், உறவையும் நிறுத்தி விட்டுப் போய் விட்டதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம் வோஸ்னியாக்கி.
இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர். நவம்பர் 8ம் தேதி நியூயார்க்கில் வைத்து திருமணமும் நடக்கத் திட்டமிடப்பட்டது. நிச்சயதார்த்தமும் முடிந்தது. திருமண அழைப்பிதழ்களும் கூட ரெடியாகி விட்டன.

இந்த நிலையில் திடீரென உறவும், திருமணமும் முறிந்து விட்டதாக அறிவித்து விட்டார் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த வோஸ்னியாக்கியின் காதலரான மெக்கல்ராய். இவர் கோல்ப் வீரர் ஆவார்.
தற்போது முழங்கால் வலியால் வேறு அவதிப்பட்டு வருகிறார் வோஸ்னியாக்கி. இந்த நிலையில் காதலர் இதயத்தை இடியைப் பாய்ச்சியுள்ளதால் சிதறிப் போய் இருக்கிறாராம் வோஸ்னியாக்கி.
இந்த உறவு முறிவுக்கு வோஸ்னியாக்கி காரணமல்ல, தான்தான் காரணம் என்றும் மெக்கல்ராய் கூறியுள்ளார். ஆனால் தான் இன்னும் திருமணத்திற்குத் தயார் இல்லை என்பதால்தான் இதை முறிக்க முன்வந்ததாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.