ஹாங்சோ: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளுக்கான மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் புதிய வரலாறு படைத்தனர். 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் ஆசிய போட்டிகளில் முதல்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது.

இந்த நிலையில் ஆசிய போட்டிகள் நடைபெற்ற சீனாவில் ஹாங்சோ நகரில் தற்போது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக 17 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் என்று 303 பேர் அடங்கிய இந்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 4 நாட்கள் போட்டிகளின் முடிவில் 18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 82 பதக்கங்களை வென்றிருந்தனர்.
இந்த நிலையில் 5வது நாளான இன்று மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் சீன வீராங்னையை எதிர்கொண்ட துளசிமதி முருகேசன் 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். குறிப்பாக இரண்டாவது செட்டில் 5-2 என்ற பின் தங்கியிருந்த சூழலில், கடைசி நேரத்தில் அட்டாக் செய்து அபார வெற்றியை பதிவு செய்தார்.
அதேபோல் பெண்கள் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் ஷீதல் தேவி தங்கம் வென்று அசத்தினார். அதேபோல் பேட்மிண்டன் பிரிவில் இந்திய ஆடவர் தரப்பில் பிரமோத் பகத் தங்கமும், நிதேஷ் வெள்ளியும் வென்று அசத்தினர். அதுமட்டுமல்லாமல் வில்வித்தை தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியா சார்பாக ராகேஷ் குமார் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணி மொத்தமாக 21 தங்கம், 26 வெள்ளி மற்றும் 43 வெண்கலம் உட்பட 90 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.