நெல்லை: கேரம் விளையாட்டில் சர்வதேச அளவில் தமிழக வீரர் முகமது ஆதில் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளார்.
22 வயதான முகமது ஆதில், நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர். தற்போது கல்லூரியில் பிசிஏ படித்து வரும் ஆதில், கேரம் விளையாட்டில் கிங்காக வலம் வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அளவில் தஞ்சையில் நடைபெற்ற கேரம் விளையாட்டு சாம்பியன்ஷிப் தொடரில் ஆதில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் தங்கம் வென்ற ஆதில், கடந்த வாரம் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ நேபாள் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.
பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள முகமது ஆதில், தொடரில் பங்கேற்க தெரிந்தவர்களிடம் பணம் பெற்று விளையாடும் நிலையில் தான் இருக்கிறார். இதனால் ஆதிலுக்கு தமிழக அரசோ, மத்திய அரசோ ஊக்கத் தொகை வழங்கினால், அது அவருடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். கேரம் விளையாட்டை நாம் வெறும் பொழுதுப் போக்கு விளையாட்டாக தான் பார்க்கிறோம்.
ஆனால், அதுவும் ஒரு தொழில்முறை விளையாட்டு தான். தேசிய அளவில், சர்வதேச அளவிலும் சாதிக்க முடியும். இந்தியாவில் செஸ் போல் உருவான கேரம் விளையாட்டில் கூட தமிழகம் தான் தலைநகராமாக விளங்குகிறது. மரியா இருதயம், இளவழகி போன்ற உலக சாம்பியன்கள் தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளனர். இதனால் கேரம் விளையாட்டு போட்டிகளை பெரிய அளவில் நடத்தி, வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது வேற லெவல்.. வாள்வீச்சு போட்டியில் வீர தமிழச்சி சாதனை.. 2வது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி