தேசிய எறிபந்து போட்டியில் தமிழகத்திற்கு 3வது இடம்.. சாதித்த கரூர் மாணவிகள்!
கரூர்: தேசிய எறிபந்து போட்டியில் தமிழக அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. தமிழக அணியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் இடம் பெற்று சாதனையும் படைத்துள்ளனர்.
கரூர் பகுதியில் அமைந்துள்ள வையாபுரி நகர் பகுதியை சார்ந்தவர் இரா.ஜீவானந்தம். இவரது தந்தை பி.இராமு, தாயார் சரஸ்வதி ஆவார். பி.எஸ்.சி விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த ஜீவா தற்போது தமிழ்நாடு எறிபந்து கழகத்தில் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

எறிபந்து பயிற்சியாளராக இருக்கும் ஜீவானந்தம், 80 வீரர்களையும், 60 வீராங்கனைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். சிறு வயதிலிருந்தே எறிபந்து மீது ஆர்வம் கொண்ட அவர், புதுக்கோட்டை ஜேஜே கல்லூரியில் படித்தபோதே பயிற்சியாளராகவும் மாறினார்.
தனது லட்சியம் குறித்து ஜீவானந்தம் கூறுகையில், உலக அளவில் நடைபெறும் எறிபந்து போட்டியில் நான் பயிற்சி கொடுத்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்று எனக்கு பெயர் சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும் என்றார்.

சமீபத்தில் தேசிய அளவில் கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் 37 வது தேசிய எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் 25 மாநிலங்களிலிருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மகளிர் பிரிவில் தமிழக அணி மூன்றாவது இடம் பெற்றது.
தமிழக அணியில் கரூர் மாவட்டம், பொன் வித்யா மந்திர் பள்ளியில் இருந்து மாணவிகள் நந்திதா, ராகவி, சாந்தினி, சுதர்சினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு எறிபந்து கழக பொது செயலாளர் சி.சர்வேசன் மற்றும் தலைவர் மணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications