ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பு
வரும் ஜூலை மாதத்தில் டோக்கியோவில் துவங்கவிருந்த ஒலிம்பிக் 2020 போட்டிக்கான வேலைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தன. சில நாடுகளில் தகுதிப்போட்டிகளும் சிறப்பான அளவில் நடைபெற்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பையடுத்து ஒரு வருடத்திற்கு ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் ஜரூராகத்தான் நடைபெற்று வந்தன. ஆயினும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த பிரதமர் ஷின்சோ அபே, ஒலிம்பிக் கமிட்டியிடம் இதை ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, ஒலிம்பிக் கமிட்டி தலைவர், அடுத்த வெயில்காலத்திற்கு போட்டிகளை ஒத்திவைத்து அறிவித்தார்.
ஒலிம்பிக் கமிட்டியின் முதல் அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஏராளமான கோடி ரூபாய்கள் இதுவரை செலவிடப்பட்டுள்ளன. ஆயினும் தற்போதைய சூழ்நிலையில் போட்டிகளை தள்ளி வைப்பது ஒன்றே சரியான தீர்வாக கருதப்படுகிறது. இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் 4 முறை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை.
2024ல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்
இந்த ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 2024ம் ஆண்டில் பாரீசில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒரு ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாரீஸ் 2024 போட்டிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று தற்போது அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
3 ஆண்டுகள் இடைவெளி
வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த கொரோனா பீதி காரணமாக டோக்கியோவில் இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு 3 ஆண்டுகளே இடைவெளி இருக்கும். ஆயினும் 3 ஆண்டுகள் இடைவெளி உள்ளதால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அதன் நிர்வாகக்குழு தலைவர் டோனி எஸ்டாங்குவேட் தெரிவித்துள்ளார்.