அதிக எதிர்பார்ப்பு
மகளிர் ஹாக்கி போட்டியின் 2வது தகுதிச்சுற்றில் இன்று இந்தியா - ஜெர்மணி அணிகள் மோதின. ஏற்கனவே நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று போட்டியில் நெதர்லாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்திருந்ததால், 2வது போட்டியில் நிச்சயம் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போட்டி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது இந்திய அணி.
தொடக்கம்
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெர்மணி அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. அதன் பின்னர் இரு அணிகளுமே தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் நீண்ட நேரமாக கோல் எதுவும் வராமலேயே இருந்தது. கடும் சிரமங்களுக்கு மத்தியில் இந்தியாவின் குஜ்ரித் கவுர் கோல் ஒன்றை அடிக்க முயன்றார். மிகவும் க்ளோஸ் ஆக சென்றாலும் மிஸ் ஆனது.
இந்தியா தோல்வி
இதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட ஜெர்மணி அணி 2வது கோலை அடித்து ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு பின்னர் இந்திய அணியின் கோல் எண்ணிக்கை மட்டும் உயர்ந்திட கூடாது என முடிவெடுத்த ஜெர்மணி, தடுப்பாட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியது. இதனால் கடைசி வரை இந்திய அணிக்கு ஒரு கோல் கூட கிடைக்காததால், ஜெர்மணி அணி 2 -0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி மீண்டு விடும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆடவர் அணியும் ஏமாற்றம்
இதே போல நேற்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி ஏமாற்றம் அளித்தது. முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய ஆடவர் அணி 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7 - 1 என்ற கோல் கணக்கில் படு தோல்வியை சந்தித்தது.