மல்யுத்த போட்டி
2021 ஒலிம்பிக் ஆட்டத்தில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தொடக்க ஆட்டம் முதலே சிறப்பாக ஆடி வருகிறார். இன்று காலை நடந்த ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் பஜ்ரங் புனியா வெற்றிபெற்றார். இந்த போட்டியில் கிரகஸ்தான் வீரர் ஏர்னேசரை பஜ்ரங் புனியா எதிர்கொண்டார். 3:3 என்ற புள்ளி கணக்கில் ஆட்டம் டிரா ஆன நிலையில் கடைசியில் டேக் டவுன் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார்.
அரையிறுதி
இதனையடுத்து அரைமணி நேர இடைவெளியில் காலிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஈரான் வீரர் மோர்டேசாவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடக்கத்தில் மோர்டேசாதான் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் மோர்டேசா 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றார். பஜ்ரங் புனியா இதில் புள்ளிகள் எதையும் பெறவில்லை. ஆனால் 2வது சுற்றில் பஜ்ரங் புனியா 2 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் 2:1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பஜ்ரங் புனியா அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
ஏமாற்றம்
இந்நிலையில் புனியாவுக்கான அரையிறுதி ஆட்டமும் இன்றே நடைபெற்றது. இந்த போட்டியில் அலேர்பாய்ஜன் வீரர் ஹாஜி ஆலியேவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆலியோவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சுற்றின் முடிவில் ஆலியோவ் 4 புள்ளிகளை எடுத்தார். பஜ்ரங் புனியா ஒரே ஒரே புள்ளியுடன் பின்தங்கி இருந்தார்.
2வது சுற்றில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் புள்ளிகளை அவ்வளவு எளிதாக பெற முடியவில்லை. எவ்வளவு போராடியும் எதிரணி வீரர் அசையாமல் இருந்ததால் ஆலியோவின் பக்கமே புள்ளிகள் சென்றது. இதனால் ஆட்டத்தின் இறுதியில் 12 - 5 என்ற கணக்கில் பஜ்ரங் புனியா வீழ்ந்தார். அவரின் தங்கப்பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
வெண்கலம்
எனினும் பஜ்ரங் புனியா அரையிறுதி வரை சென்றதால், அவருக்கு வெண்கலப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் பதக்க எண்ணிக்கை நாளை உயரும் என கூறப்படுகிறது.