இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி வந்த ரவிக்குமார் தஹியா அரையிறுதிப்போட்டியில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கசகஸ்தானை சேர்ந்த நுரிஸ்லாம் சனாயெவை எதிர்கொண்ட அவர், கடைசி நிமிடம் வரை அனைவரையும் நகம் கடிக்க வைத்து வெற்றி பெற்றார். எதிரணி வீரர் 9 புள்ளிகளும், ரவிக்குமார் 7 புள்ளிகளையுமே பெற்றிருந்தனர். ஆனால் கடைசி விநாடிகளில் ஃபால் முறையில் நுரிஸ்ஸாமை வீழ்த்தி அபாரா வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார்.
இறுதிப்போட்டி தொடக்கம்
இந்நிலையில் ரவிக்குமார் தஹியாவுக்கான ஆடவர் மல்யுத்தத்தின் இறுதிப்போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ரஷ்யாவின் சாவூர் உகுயேவை எதிர்த்து அவர் போட்டியிட்டார். மொத்தம் 6 நிமிடங்கள் போட்டி நடைபெறும். அதன்படி ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனால் முதல் 30 விநாடிகளுக்கு ஒரு புள்ளிகள் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதன் பின்னர் ரஷ்ய வீரரின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சுற்றில் 2 - 4 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் முன்னிலை பெற்றார்.
போராடி தோல்வி
2வது சுற்றில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு புள்ளியை இழந்தார் ரவிக்குமார். இதனால் ஆட்டம் 5 - 2 என்ற சூழலுக்கு சென்றது. பின்னர் சுதாரித்துக்கொண்ட ரவி, 2 புள்ளிகளை டெக்னிக்கல் முறையில் கைப்பற்றினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கடைசி சில நிமிடங்களில் ரஷ்ய வீரர் 2 புள்ளிகளை எடுத்து 7 - 4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
வெள்ளிப்பதக்கம்
இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும், ரவிக்குமார் தஹியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானுவுக்கு அடுத்ததாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் ரவிக்குமார் தஹியாவே ஆகும். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பிரதமர் பாராட்டு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை வியப்பூட்ட செய்யும் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா. அவரின் விடாப்பிடியான சண்டையும், நோக்கமும் மிகச்சிறப்பாக இருக்கும். இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த அவருக்கு வாழ்த்துகள். அவரின் அற்பணிப்பால் தேசமே பெருமைக்கொள்கிறது.
குடியரசுத்தலைவர் புகழாரம்
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த ரவி தஹியாவை நினைத்து நாடே பெருமை கொள்ளும் தருணம் இது. ஆட்டத்தின் கடிமையான சூழலிமும் நீங்கள் சிறப்பான கம்பேக் கொடுத்து அசத்தினீர்கள். உண்மையான சாம்பியன் நீங்கள். உங்களின் மன வலிமை வியப்பளிக்கிறது. இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உங்களுக்கு வாழ்த்துக்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.