மல்யுத்த போட்டி
2021 ஒலிம்பிக் ஆட்டத்தில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தொடக்க ஆட்டம் முதலே சிறப்பாக ஆடி வந்தார். தனது முதல் ஆட்டத்தில் (65kg ஆட்டம் 1/8 பைனல்) கிரகஸ்தான் வீரர் ஏர்னேசரையும், காலிறுதிப்போட்டியில் ஈரான் வீரர் மோர்டேசாவை 2: 1 என்ற புள்ளிக்கணகில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் நேற்று அரையிறுதிப்போட்டியில் பங்கேற்றார்.
அரையிறுதி தோல்வி
இந்த போட்டியில் அலேர்பாய்ஜன் வீரர் ஹாஜி ஆலியேவை அவர் எதிர்கொண்டார். முதல் சில போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் புனியா, அரையிறுதியின் தொடக்கத்திலேயே தடுமாறினார். இதனால் முதல் சுற்றின் முடிவில் ஆலியோவ் 4 புள்ளிகளை எடுத்தார். பஜ்ரங் புனியா ஒரே ஒரே புள்ளியுடன் பின்தங்கி இருந்தார்.
2வது சுற்றில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் புள்ளிகளை அவ்வளவு எளிதாக பெற முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் இறுதியில் 12 - 5 என்ற கணக்கில் பஜ்ரங் புனியா வீழ்ந்தார். அவரின் தங்கப்பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
வெண்கலம்
இந்நிலையில் பஜ்ரங் புனியா அரையிறுதி வரை சென்றதால், அவருக்கான வெண்கலப்பதக்கம் வெல்வதற்கான போட்டி இன்று நடைபெற்றது. கஜகஸ்தான் வீரர் தௌலெத் நியாஸ்பேகோவை இந்த போட்டியில் புனியா எதிர்கொண்டார். அரையிறுதியில் தொடக்கத்திலேயே தடுமாறிய பஜ்ரங் புனியா இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்டினார். எதிரணி வீரர் தன்னை சாய்க்க முடியாமல் வலுவாக அவர் இருந்ததால் முதல் சுற்றின் முடிவில் 2 - 0 என்ற கணக்கில் புனியா முன்னிலை பெற்றார்.
அபார வெற்றி
2வது சுற்றிலும் தனது அதே ஆக்ரோஷத்தை காட்டிய பஜ்ரங் புனியா எதிரணி வீரரை ஒரு புள்ளிகளை கூட எடுக்க விடாமல் தூணை போல நின்று சமாளித்தார். ஆனால் மறுபுறம் அவரும் புள்ளிகளை குவித்து வந்தார். இதனால் ஆட்டத்தின் இறுதியில் 8 - 0 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவுக்கு 6வது பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில் தற்போது அது 6 ஆக உயர்ந்துள்ளது. மல்யுத்தத்தில் ஏற்கனவே ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.