தங்கப்பதக்கம்
மொத்தம் 6 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி அசத்தினார். முதல் சுற்றிலேயே அதிக தூரம் வீசிய அவர், 2வது சுற்றில் இன்னும் வேகமெடுத்து 87.58 மீ தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் யாராலும் தொட முடியாத இடத்தை 2வது சுற்றிலேயே அவர் உறுதி செய்தார். அனைவரும் எதிர்பார்த்ததை போலவே 6 சுற்றுகளிலும் நீரஜின் தூரத்தை ஒரு வீரரால் கூட முந்த முடியவில்லை. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார்.
முதல் பதக்கம்
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 100 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கடந்த 1920ம் ஆண்டு முதல் இந்தியா பங்கேற்று வருகிறது. பலப்போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்றிருந்தாலும், இதுவரை தடகளப்பிரிவில் மட்டும் ஒரு பதக்கம் கூட இந்தியா வென்றதில்லை. அந்த ஏக்கத்தை இன்று நீரஜ் சோப்ரா தீர்த்துள்ளார்.
பெருமை மிகுந்த வார்த்தைகள்
இந்நிலையில் போட்டியில் வென்றவுடன் நீரஜ் சோப்ரா கூறிய வார்த்தைகள், இந்தியர்களை பூரிப்படைய செய்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், இன்று நான் வென்ற தங்கப்பதக்கத்தை, மறைந்த தடகள ஜாம்பவான் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிப்பததாக கூறினார். அவர் மேல் இருந்து என்னை நினைத்து பெருமைப்படுவார், ஆசியளிப்பார் எனத்தெரிவிதுள்ளார்.
மில்கா சிங்
இந்தியாவின் தடகளப்பிரிவில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் மில்கா சிங். ஒலிம்பிக்கில் தடகளப்போட்டியில் ஒரு பதக்கமாவது வென்று கொடுக்க வேண்டும் என நினைத்தவர். 1960ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அவர் சிறிய இடைவெளியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 4வது இடத்தை அவர் பிடித்ததால் பதக்க கனவு பொய்யானது. அதன் பிறகு நீண்ட வருடங்களாக ஒலிம்பிக்கில் யாராவது பதக்கம் வென்றுவிட மாட்டார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவரின் ஆசை நிறைவேறுவதற்கு முன்னதாகவே உயிரிழந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். தற்போது அவருக்காக தங்கப்பதக்கத்தை அர்ப்பணித்துள்ளார் நீரஜ் சோப்ரா.
புகழாரம்
இதனிடையே மில்கா சிங்கின் மகன் ஜீவ் மில்கா சிங், நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்து ட்வீட் போட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒரு அற்புதமான ஆட்டம் நீரஜ். எனது தந்தை நீண்ட வருடங்களாக இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தார். அவரின் கனவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த பதிவை போடும் போது நான் அழுதுக்கொண்டிருக்கிறேன். தந்தையும் மேல் இருந்து ஆனந்த கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார். இதனை நிகழ்த்தி காட்டியதற்கு நன்றி எனக்கூறியுள்ளார்.
பெருமை
போட்டிக்கு பின்னர் தொடர்ந்து பேசிய நீரஜ் சோப்ரா, இந்த தருணம் எனக்கு மிகவும் நெகழ்ச்சியாக உள்ளது. இந்தியாவுக்காக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறேன். இந்தியாவுக்காக வேறு ஒரு போட்டியில் ஒரே ஒரு தங்கம் தான் இதுவரை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. எனவே இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கும் நாட்டிற்கும் இது பெருமையான தருணம் என அவர் கூறியுள்ளார்.