
பதக்கம் வென்ற மீராபாய்
மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன் மூலம் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட இந்தியர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பளுதூக்குதலில் பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமை எப்படி உள்ளது?
அது என் வாழ்வில் மிக முக்கியமான தருணம். கர்ணம் அவர்களை தொடர்ந்து நானும் பதக்கம் வென்றிருக்கிறேன் என்பதை நினைத்து பெருமையாக உள்ளது. எனக்காக கடினமாக பயிற்சி கொடுத்த விஜய் சர்மாவுக்கு நான் எப்போதுமே நன்றி கடமைப்பட்டுள்ளேன். அதே போல இந்திய பளுதூக்குதல் ஃபெடரேஷன், பெற்றோர்கள், இந்திய ரயில்வே துறைக்கும் நன்றி கூற வேண்டும்.

இளைஞர்களுக்கு உங்களுடைய அறிவுறுத்தல் என்ன?
நமது நாட்டில், பளுதூக்குதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நீண்ட காலத்திற்கு விளையாட முடியாது என்ற பிம்பம் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் என்னுடைய செயல்பாடுகள் அதனை உடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்தியாவின் இளம் பெண்கள் பலரும் விளையாட்டு துறையில் கால் பதித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

டோக்கியோவில் ரசிகர்களை மிஸ் செய்தீர்களா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. எனவே அவர்களின் ஆரவாரத்தையும், உற்சாகப்படுத்துதலையும் நான் அங்கு மிஸ் செய்தேன். எனினும் இந்தியாவில் இருந்து எனக்காக பலரும் பிரார்த்தனை செய்திருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். என்னுடையை பதக்கத்தை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறேன்.

பதக்கம் வென்றவுடன் மேரிகோமை சந்தித்தீர்கள், அவர் என்ன கூறினார்?
பதக்கம் வென்றததற்காக அவர் பாராட்டினார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், என் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்து இருப்பதாக கூறினார். மேலும் இதே போன்ற உத்வேகத்தை கைவிடவே கூடாது என்றும் எதிர்காலத்தில் வரும் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என அறிவுரை கூறினார்.

பதக்கம் வென்றவுடன் உங்கள் குடும்பத்தினரின் மனநிலை எப்படி இருந்தது.
எனது பெற்றோர் மற்றும் மொத்த குடும்பத்தினரும் தற்போது நிலவிற்கு சென்றதை போல உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் எனது போட்டியை டிவியில் பார்த்ததை நானும் பார்த்தேன். நான் எப்போது வீடு திரும்புவேன் என பெற்றோர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இது நீண்ட பயணமாகி விட்டது. இந்த ஒலிம்பிக் பதக்கத்திற்காக பல விழாக்கள், பண்டிகைகளை தவறவிட்டுவிட்டேன். தற்போது அவை அனைத்தையும் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறேன்.

ரியோ ஒலிம்பிக் உங்களுக்கு கொடுத்த அனுபவம் என்ன?
ரியோ ஒலிம்பிக்கில் அடைந்த தோல்வி எனக்கு வாழ்வில் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நான் இன்று பெற்ற வெற்றி அனைத்தும் ரியோ ஒலிம்பிக் தோல்வி கொடுத்த உத்வேகம் தான் காரணம். கடந்த ஒலிம்பிக்கில் சிறு சிறு தவறு செய்தேன். அதன் பிறகு எனது உணவுப்பழக்கம், உடல்நிலை ஆகியவற்றை சரிபடுத்திக்கொண்டு பயிற்சி செய்தேன். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பயிற்சி முகாம்கள் நடந்தன. அதுதான் ஒலிம்பிக்கிற்கு என்னை தயார் படுத்தியது.
Recommended Video

அடுத்த திட்டம் என்ன?
எனக்கு தற்போது 26 வயதே ஆகிறது. நல்ல உடல்நிலையுடன் ஃபிட்டாக இருக்கிறேன். எனவே கண்டிப்பாக எதிர்கால திட்டங்கள் உள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் தான் எனது அடுத்த டார்கெட். நிச்சயமாக தங்கப்பதக்கத்துடன் தான் பாரிஸில் இருந்து வருவேன். முன்பு கூறியதை போலவே, டையட் மற்றும் உடல் ஆரோக்கியோத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறேன். அது என்னை சாம்பியனாக மாற்றும் என நம்புகிறேன் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











