ரவிக்குமார்
இந்நிலையில் இன்று இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்யும் வகையில் ஆடவர் மல்யுத்த அரையிறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றுள்ளார்.
அரையிறுதிப்போட்டி
ஒலிம்பிக் 2020 தொடரின் பல்வேறு பிரிவு மல்யுத்த போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மல்யுத்தத்தின் ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றார். இவர் கொலம்பியாவின் டைக்ரசை எதிர்கொண்டு அவரை எளிதாக 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
அரையிறுதி
காலிறுதிப்போட்டியும் இன்று காலையே நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா, பல்கேரியா வீரர் ஜார்ஜி வாலண்டினோவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் தொடக்கம் முதல் ஆக்ரோஷம் காட்டிய ரவிக்குமார் தஹியா 14 - 4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்நிலையில் ரவிக்குமாருக்கான அரையிறுதிப்போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டியில் கசகஸ்தானை சேர்ந்த நுரிஸ்லாம் சனாயெவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடக்கத்தில் ரவிக்குமார் சற்று தடுமாறி ஒரு புள்ளியை பறிகொடுத்துவிட்டார். இதன் பின்னர் அட்டாக்கிங் கேமை தொடங்கிய அவர், 2 புள்ளிகளை பெற்று முதல் சுற்றில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
அபார வெற்றி
ஆனால் 2வது சுற்றின் தொடக்கமும் ரவிக்குமாருக்கு சாதகமாக அமையவில்லை. கஜகஸ்தான் வீரர் சனயாயேவ் ஆக்ரோஷமாக விளையாடி 9 - 2 என்ற முன்னிலையை பெற்றார். 2வது சுற்றை கைப்பற்ற மிக கடினமான புள்ளி இலக்கு இருந்தது. அரையிறுதியில் முன்னேற கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே ரவிக்குமாரிடம் இருந்தது. ஆனால் அப்போது ஃபால் முறையை பயன்படுத்தி அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இறுதிசுற்று
இந்தியாவுக்கு வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில் முதல் முறையாக டோக்கியோவில் ஆண் வீரர் ஒருவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இறுதிப்போட்டியில் ஈரான் அல்லது ரஷ்ய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாள் ஆசை
23 வயதாகும் ரவிக்குமார் ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்திலுள்ள நஹ்ரி எனும் கிராமத்தில் பிறந்தவர். விவசாய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே மல்யுத்த போட்டியின் மீது அதிக ஆர்வத்தை கொண்டிருந்த ரவிக்குமார் தஹியா 2018-ல் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019, 2020 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர். இவருக்கு முக்கியமான ஒலிம்பிக் பதக்கம் மட்டும் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த முறை அந்த ஆசை நிறைவேறியுள்ளது.