வெள்ளி
டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியா ஒரு பதக்கத்தை கூட வெல்லாமல் இருந்தது. அதனை மாற்றி அமைத்து முதல் பதக்கத்தையே வெள்ளிப்பதக்கமாக வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பளுதூக்குதலில் பெண்கள் 49 கிலோ பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 87 கிலோ மற்றும் 115 கிலோ ஆகியவற்றில் அவரது லிஃப்டிங் மிக அபாரமாக இருந்தது. இது அவருக்கு மொத்தம் 202 கிலோ எடையைக் கொடுத்தது.
குவியும் வாழ்த்து
பதக்கத்துடன் முதல் ஆளாக நாடு திரும்பிய மீரா பாய் சானுவுக்கு சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மூத்த அதிகாரிகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள், மீராபாய் சானுவுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. பிசிசிஐ மற்றும் பல பிரபல தொழில் நிறுவனங்களும் அவருக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளன.
சச்சின் - மீராபாய் சந்திப்பு
இந்நிலையில் மீரா பாய் சானு இன்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். சச்சின் பொதுவாக மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் உற்று நோக்கி அவர்களுக்கு பரிசளித்து ஊக்குவிக்கக்கூடியவர். அந்தவகையில் இன்று மீராபாய் சானுவையும் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார். அவருக்கு பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து கூறினார்.
நெகிழ்ச்சி பதிவு
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீராபாய் சானு போட்டுள்ள பதிவில் மீராபாய் சானுவின் வெள்ளிப்பதக்கத்தை சச்சின் கையில் எடுத்து பார்ப்பது போன்றும், அவருக்கு பூங்கொந்து கொடுப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சச்சின் அவர்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவரின் அனுபவம் மற்றும் ஊக்குவிக்கும் வார்த்தைகள் என்றும் எனக்குள் இருக்கும். அது மிகவும் ஊக்குவிக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
சர்ஃப்ரைஸ் கிஃப்ட்
கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் போது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். அவரை நேரில் அழைத்து பாராட்டியிருந்த சச்சின், புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்திருந்தார். எனவே மீராபாய்-க்கு விரைவில் ஏதேனும் ஒரு பரிசினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.