
போராடி தோல்வி
அர்ஜென்டினா அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. ஆட்டதின் துவக்கத்தில் 1 - 0 என லீட் எடுத்தது இந்தியா. இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் அர்ஜென்டினா 2 - 1 என முன்னிலை பெற்றது. இறுதி பகுதியில் கோல் கணக்கை சமன் செய்ய முயன்ற இந்தியா அதில் போராடி தோற்றது. எனினும் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்ல மற்றொரு வாய்ப்பு உள்ளது. வெண்கலப்பதக்கத்திற்கான போட்டிகள் நாளை நடைபெறவுள்ளது.

வெண்கலப்பதக்கம்
நாளை நடைபெறவுள்ள வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, கிரேட் பிரிட்டன் அணியை எதிர்த்து போட்டிப்போடவுள்ளது. இதற்கான கடைசி கட்ட பயிற்சிகளில் இந்திய மகளிர் அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் மகளிர் தான் அதிக பதக்கங்களை குவித்து வருகின்றனர். எனவே இந்திய மகளிர் ஹாக்கி அணியும் தனது பங்கிற்கு பதக்கம் வென்று சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் அறிவிப்பு
இந்நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டிக்காக இந்திய மகளிர் அணியை உற்சாகப்படுத்தும் வகையில் பிரபல தொழிலதிபர் சாவ்ஜி தொலக்கியா சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டால், அணி வீராங்கனைகளில் யாருக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அவர்களுக்கு வீடு கட்ட ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். ஒரு வேளை ஏற்கனவே வீடு உள்ள வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரினை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பரிசுக்கு பெயர்போனவர்
சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி சாவ்ஜி தொலக்கியா ஆவார். இவர் ஹரி கிருஷ்ணா என்ற குழுமத்தின் தலைவராக உள்ளார். சாவ்ஜியின் பெயர் ஏற்கனவே பல்வேறு செய்திகளில் வெளிவந்து பிரபலமாகியுள்ளது. இதற்கு காரணம் அவர் பரிசுக்கொடுக்கும் அளவு தான். இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டு தோறும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு போனஸ் வழங்கும் வகையில் புதிய காரினை பரிசாக வழங்கி வருகிறார்.

பென்ஸ் கார்கள்
பண்டிகைகள் மட்டுமல்லாது, ஊழியர்கள் 25 ஆண்டுகள், 10 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பூர்த்தி செய்தால் அவர்களுக்கு சொகுசுக்கார்களையும் பரிசாக வழங்கி வருகிறார். சமீபத்தில் 25 வருடங்களை பூர்த்தி செய்த 3 ஊழியர்களுக்கு பென்ஸ் காரினை பரிசளித்திருந்தார். இது போல இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை வைர வியாபாரி சாவ்ஜி தோலக்கியா வாரி வழங்கியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியின் பக்கம் பார்வை
இந்நிலையில் இவரின் பார்வை தற்போது விளையாட்டு துறையின் பக்கம் திரும்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்திய பெண்கள் சரித்திரம் படைத்து வருகிறார்கள். மகளிர் ஹாக்கியில் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானுவை பார்த்து நான் வியந்தேன். ஆதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தூண்டுகோளாக இருக்கும்
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுவிட்டால், அணியில் எந்தெந்த வீராங்கனைகளுக்கு வீடு இல்லையே அவர்களுக்கு ரூ.11 லட்சம் கொடுக்கப்படும். மேலும் சொந்த வீடு உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சத்தில் கார் பரிசாக கொடுக்கப்படும். எனது இந்த அறிவிப்பு இந்திய வீராங்கனைகளுக்கு ஓர் உற்சாகமூட்டும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications