கொரோனாவால் ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோவில் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கென பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஜப்பான் அரசு முழிபிதுங்கியுள்ளது.
ஒலிம்பிக்கை நடத்த முடியாது
இந்நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சாத்தியப்படாது என்று ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் யோஷிடேக் யோகோகுரா தெரிவித்துள்ளார். ஜப்பான் அரசு ஒலிம்பிக்கை நடத்துமா என்பது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை ஆனால், கொரோனா பாதிப்பை வைத்துக் கொண்டு ஒலிம்பிக்கை நடத்துவது கடினமானது என்று அவர் கூறியுள்ளார்.
யோகோகுரா அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை ஜப்பான் அரசு மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் யோகோகுரா கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை தவிர்க்க பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்து காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மருந்து கிடைக்க தாமதம் ஆகும்
தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்த மருந்துகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொரோனாவிற்காக மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை பல்வேறு சோதனைகளை கடந்து, மக்களுக்கு எளிதாக கிடைக்க மேலும் கால தாமதம் ஏற்படும். இதனால் இன்னும் சில மாதங்களாவது கொரோனா பாதிப்பை சர்வதேச அளவில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.