தொடக்க விழா
உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வழக்கமாக மிகவும் பிரம்மாண்ட முறையில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள் தொடங்குவதால், நாளை நடைபெறவிருக்கும் தொடக்க நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தொடக்க நிகழ்ச்சி மிக மிக எளிமையான முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நடன நிகழ்ச்சிகள்
தொடக்க விழாவில் முக்கிய பங்கு வகிக்கும், நடனங்கள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யாமல், சமூக இடைவெளியுடன் கூடிய எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எப்போதும் போல பல நாடுகளில் இருந்து நடிகர், நடிகைகள், திரை பிரபலங்களுக்கெல்லாம் இந்த முறை அழைப்பு விடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 10,000 வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். ஆனால் இந்த முறை அவை பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் பங்கேற்பு
இந்த தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள 15 நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்திருப்பதாக தெரிகிறது. இதில், பிரெஞ்ச் நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரான், மங்கோலிய பிரதமர் லுவ்சானம்ஸ்ராய் உள்ளிட்டோரும் அடங்குவர். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு ஒலிம்பிக் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. பின்னர் கொரோனா காரணமாக தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் அமைப்பே சில தலைவர்களை வரவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இருக்கைகள்
டோக்கியோ நகரத்தில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. எனவே தொடக்க விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் 1000க்கும் குறைவான நபர்களே ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை புதுவகையில் நடைபெறுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கோரிக்கை
ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தொடக்க நிகழ்ச்சி நடத்துவதே மிகப்பெரும் ரிஸ்க் என்ற வகையில் உள்ளது. ஏனென்றால் இதுவரை 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் போட்டி முடிந்தவுடன் உடனடியாக அவர்களின் நாட்டிற்கு திரும்ப ஒலிம்பிக் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.