
அரையிறுதி ஆட்டம்
இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி ஆண்கள் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து மோதியது. ஆனால் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி கடைசி நொடி வரை கடுமையாக போராடியும் கூட இன்று தோல்வியை தழுவியது.

தொடக்கம் எப்படி
இந்த ஹாக்கி போட்டியில் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சென்றது. இரண்டு அணிகளுமே விட்டுக்கொடுக்காமல் சம பலத்தோடு விளையாடி வந்ததால் கோல்கள் எந்த அணியின் பக்கம் இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது. எனினும் பெல்ஜியம் அணிதான் இதில் முதலில் கோல் போட்டது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அந்த அணியின் லூயிபார்ட் முதல் கோல் அடித்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.

விறுவிறுப்பு
தொடக்கமே பெல்ஜியம் அணிக்கு சாதகமாக சென்றதால், விட்டுவிடக்கூடாது என முடிவெடுத்த இந்திய அணியில் மன்தீப் சிங் மற்றும் ஹர்மந்தீப் சிங் ஆகியோர் கடுமையாக போராடினர். இதன் பலனாக போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே ஹர்மன்தீப் சிங் கிளாசிங் ஷாட் முதல் கோல் அடித்தார். இவர் கோலால் ஆட்டத்தின் புள்ளிக்கணக்கு 1 - 1 என சமநிலை ஆனது. மேலும் எதிரணி வீரர்கள் சற்று தலைவலி கொடுத்தது.

அடுத்தடுத்த சரிவு
கோல் அடித்த நம்பிக்கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட இந்திய அணி தொடர்ந்து அட்டாக்கிங் கேமை விளையாடியது. இதன் காரணமாக அடுத்த நிமிடத்திலேயே இந்தியாவுக்கு 2வது கோல் கிடைத்தது. இந்தியாவின் நட்சத்திர வீரர் மன்பீத் சிங் எட்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். ஆனால் இதன் பிறகு தான் ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு நழுவத்தொடங்கியது. நீண்ட நேரமாக தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணி, ஓர் இடத்தில் சிறிய தவறு செய்ததால், பெல்ஜியம் அணி லாவகமாக தனது 2வது கோலை அடித்து புள்ளிக்கணக்கை சமநிலைப்படுத்தியது.

போராடித்தோல்வி
இதன் பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் ஷாட்களை இந்திய அணி வீரர்கள் தவறவிட, பெல்ஜியம் அணியின் கை ஓங்கத்தொடங்கியது. கடைசி 15 நிமிடங்களில் பெனால்டி வாய்ப்புகளை அடுத்தடுத்து பெல்ஜியத்திற்கு தாரைவார்த்துகொடுக்க, தொடர்ந்து 3 கோல்களை அடித்து அந்த அணி 5: 2 என வலுவான நிலைக்கு சென்றது. எனினும் இந்திய அணிக்கு கடைசி வரை கோல் அடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 5 : 2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

மேட்ச் பார்த்த பிரதமர்
இந்த பரபரப்பான ஆட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேரலையில் பார்த்து ரசித்துள்ளார். முன்னதாக இதுகுறித்து ட்வீட் செய்திருந்த அவர், இந்திய வீரர்களின் திறமையை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனக்குறிப்பிட்டிருந்தார்.

வாழ்த்துக்கள்
இதே போல ஆட்டம் முடிந்த பிறகும் இந்திய அணியை பாராட்ட அவர் மறக்கவில்லை. ட்விட்டரில் அவர், வெற்றியும், தோல்வியும் வாழ்வில் சகஜமான ஒன்று. டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்திய அணி முழுமையான திறமையையும் வெளிப்படுத்தியது. அவர்களின் அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர்களை நினைத்து இந்தியா பெருமைக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

திடீர் அழைப்பு
இதுமட்டுமல்லாமல், போட்டி முடிந்தவுடனேயே இந்திய அணி கேப்டன் மண்ப்ரீத் சிங்கிற்கு, பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அப்போது, அரையிறுதிப்போட்டி குறித்து பாராட்டுகளை தெரிவித்ததாகவும், அட்டம் முழுவதும் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டியுள்ளார். இதே போல அடுத்து நடக்கவிருக்கும் போட்டிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அடுத்த சுற்று
ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் அரையிறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5ம் தேதி ஆட வேண்டும். இந்த போட்டியில் இதில் இந்திய அணி எதிர்கொள்ள போகும் அணி எது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியை இதில் இந்தியா எதிர்கொள்ளும். ஆஸி vs ஜெர்மனி இடையிலான செமி பைனல் போட்டி நாளை நடக்க உள்ளது. இதில் தோல்வி அடையும் அணி இந்தியாவை எதிர்கொள்ளும். 41 ஆண்டுகளுகாக ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் வெல்லாமல் இருக்கும் இந்திய அணி, இந்த முறை வெண்கலப்பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











