மன ரீதியான பிரச்னை.. இந்தியாவின் பி.வி.சிந்து எடுத்த அதிரடி முடிவு.. சிமோனின் விவகாரத்தில் கருத்து
டோக்கியோ: 4 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றவரான சிமோன் பைல்ஸ் மனநிலை சரியில்லாமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது குறித்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பேசியுள்ளார்.
அமெரிக்காவின் artistic gymnastics வீராங்கனை சிமோன் பைல்ஸ், ஒலிம்பிக்கில் இருந்து நேற்று (ஜுலை.27) விலகினார்.
பயிற்சி ஆட்டங்களின் போது அவரால் நிதானமாக செயல்பட முடியவில்லை என்றும், சரியான முறையில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்பட்டது.

தடுமாற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிச்சுற்று போட்டியின் போதும் அவரது தடுமாற்றம் எதிரொலித்தது. அவர் வெறும் 13.733 ஸ்கோர் மட்டுமே பெற்றார். இதன் பின்னர் அவருக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகுகிறார் என அறிவிக்கப்பட்டது. இது பெரும் பேசுப்பொருளானது.

பி.வி.சிந்து கருத்து
இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், மன ஆரோக்கியம் மிக முக்கியமாகும். உடல் வலிமை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு மனதையும் சரியாக வைத்திருக்க வேண்டும். அந்த இரண்டிலுமே நான் சிறப்பாக இருப்பேன். நான் தினமும் தியானம் செய்வதே இதற்கு முக்கிய காரணம்.

பதக்கம் வெல்ல முனைப்பு
கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற அவர், இன்று 2வது சுற்றையும் வெற்றிகரமாக கடந்தார். ஹாங்காங்கின் சியுங் கான் என்ற வீராங்கனையை எதிர்கொண்ட அவர் 21 - 9, 21 - 16 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக உலகின் 12வது ரேங்க் பெற்றுள்ள டென்மார்க் வீராங்கனை மியா ப்ளிச்ஃபெல்ட்டை எதிர்கொள்கிறார்.

தவிர்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தயாராக தொடங்கியதில் இருந்து பி.வி.சிந்து சமூக வலைதளங்களில் இருந்து சற்று விலகியே இருப்பதாக தெரிகிறது. தனது மன நிலையை சரியாக வைத்துக்கொள்ள தற்போது செல்போனையே பயன்படுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications