சென்னை : விளையாட்டுத் துறையில் இருந்து விலகி சினிமா துறையில் சாதித்த நடிகர் நடிகைகள் யார் என்பதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கின்றோம். வாழ்க்கை என்ற பாதை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நாம் ஒரு இலக்கை நோக்கி செல்லும் போது அது கிடைக்கவில்லை என்றாலும், அதே போல் வேறு ஒரு வெற்றி வேறொரு தளத்தில் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
அப்படி விளையாட்டு துறையில் இருந்து சென்ற வீரர் வீராங்கனைகள் சினிமா துறையில் சாதித்தது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இவர் பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனவின் மகள் ஆவார்.

தந்தையை போல் தாமும் பேட்மிண்டனில் சிறந்து விளங்க வேண்டும் என்று சிறுவயதில் கடும் பயிற்சி பெற்றாராம் அது மட்டுமல்லாமல் தேசிய அளவில் பல்வேறு சாம்பியன்ஷிப் தொடர்களிலும் தீபிகா படுகோனே விளையாடி இருக்கிறார். அதன் பிறகு மாடலிங் துறையில் கவனம் திரும்பிய பிறகு 2006 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னடா திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின் 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் என்ற ஷாருக்கான் படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்றார் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பிரபல நடிகை ஜெனிலியா. ஜெனிலியா சிறுவயதில் இருந்து தடகள வீராங்கனையாகவும் கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாட்டு தேசிய அளவில் விளையாடிய ஜெனிலியாவுக்கு சினிமா துறையில் வாய்ப்புகள் வந்து குவிந்தது
அதன் பிறகு தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பாலிவுட், தெலுங்கு, தமிழ் சினிமா என்ற மூன்று திரை உலகில் உள்ள டாப் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக திகழ்ந்தார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நடைபெற்ற லீக் தொடர்களில் பங்கு பெற்ற விஷ்ணு விஷால் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவார் என அப்போது வர்ணிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஒரு விபத்தில் சிக்கி கிரிக்கெட்டே இனி விளையாட முடியாது என்ற நிலைக்கு விஷ்ணு விஷால் தள்ளப்பட்டார். அதன் பிறகு சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வம் மூலம் நடிப்பில் கவனம் செலுத்தி தற்போது பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.
1999 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சடகோபன் ரமேஷ், அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து விலகி சினிமா துறையில் ஆர்வம் செலுத்தினார். போட்டா போட்டி என்ற திரைப்படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்காதவையாக இருக்கிறது.
இதேபோன்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரீசாந்த், ஒரு காலத்தில் இந்தியாவின் டாப் பவுலராக இருந்த ஸ்ரீசாந்த் பிறகு ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை பெற்றார். அதன் பிறகு அந்த வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டாலும், பின் திரை துறையில் கவனம் செலுத்தி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.