சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனவே, இறுதி போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடனே இருந்துவருகிறது.
ஆஸ்திரேலியாவி்ல நடைபெற்றுவரும், முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் தோற்ற இந்திய அணி, தனது மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை, சிட்னியில் இன்று எதிர்கொண்டது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியதால், 44 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது.

16வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து, 69 ரன்களை எடுத்திருந்தபோது மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. அந்த நாட்டு நேரப்படி அப்போது மாலை 5 மணியாகும். அதன்பிறகும், 3 மணிநேரம் காத்திருந்து பார்த்தனர் நடுவர்கள். மழைவிடுவதாக இல்லை. எனவே ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
ரகானே அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். ஷிகர் தவான், 8 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 23 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர்.
போட்டி டிராவில் முடிந்ததன் மூலம், இந்தியா பைனலுக்கு போவதற்கான வாய்ப்பு இன்னும் எஞ்சியுள்ளது. இங்கிலாந்து அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு பைனல் போகும் வாய்ப்பு கிடைக்கும்.