அங்காரா: துருக்கியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் அங்கு நடைபெறும் சர்வதேச விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கச் சென்ற 20 தமிழர்கள் உட்பட 186 இந்தியர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்றி செய்தது. இதன் காரணமாக பதற்றம் உருவானது. பல்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், அரசு தரப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது.

துருக்கியில் சர்வதேச அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 20 தமிழக மாணவர்கள் உள்பட 186 இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் வீரர் வீராங்கனைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துருக்கியில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு தூதரகம் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்து, வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வரும் வரை இந்தியர்கள் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
துருக்கி அவசர நிலை காரணமாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் உதவிக்கு அங்காரா: +905303142203, இஸ்தான்புல்: +905305671095 ஆகிய எண்களில் அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் அங்கு நடைபெறும் சர்வதேச விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கச் சென்ற 20 தமிழர்கள் உள்பட 186 இந்தியர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியர்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக துருக்கிக்கு விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 18ம் தேதி விளையாட்டு போட்டிகள் முடிவடையும் என்றும் டிராப்சோனில் இருந்து அங்காரா அல்லது இஸ்தான்புல் சென்று இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.