வெற்றி வாய்ப்பை மீண்டும் இழந்தது உ.பி. யோத்தா
லக்னோ: புரோ கபடி லீக், 5வது சீசனில், உ.பி., யோத்தா அணி, கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து, தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது.
புரோ கபடி லீக் 5வது சீசனில், மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகின்றன.
ஏ பிரிவில் உள்ள முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பி பிரிவில் உள்ள உ.பி., யோத்தா அணியும் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மோதின.

உள்ளூரில் நடக்கும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகளில், தொடர்ந்து, இரண்டு தோல்விகளை பெற்ற உ.பி. யோத்தா அணிக்கு, வெற்றி வாய்ப்பு இருந்தும், அதை நேற்றைய ஆட்டத்தில் பதற்றமான ஆட்டத்தால் பறி கொடுத்தது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான மஞ்சித் சில்லார், காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் ஜஸ்விர் சிங் தலைமையேற்று நடத்தினார்.
ஆட்டத்தின் முதல் பாதியின்போது, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் துஷார் படேல், அனைவரையும் கவர்ந்தார். மிகச் சிறப்பான முறையில் ரெய்டு செய்து, ஆட்டத்தின், 9வது நிமிடத்தில், அணிக்கு மூன்று புள்ளிகள் முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார்.
சில நிமிடங்களிலேயே, உ.பி., யோத்தா அணி எதிர்தாக்குதல் நடத்தி, புள்ளிகளை சேகரிக்கத் துவங்கியது. முதல் பாதியின் இறுதியில், உ.பி. யோத்தா அணி,11-10 என முன்னிலை பெற்றது.
மிகவும் குறைவான ஸ்கோர் உள்ள இந்தப் போட்டியில், உ.பி. யோத்தா அணியின் ரிஷாங்க் தேவாடிகா சிறப்பாக விளையாடி, அணிக்கு 4 புள்ளிகள் முன்னிலை பெற்றுத் தந்தார்.
உ.பி., யோத்தா அணியின் கேப்டனும் நட்சத்திர ரைடருமான நிதின் தோமர், சரியாக சோபிக்கவில்லை.அதன்பிறகு, அந்த அணி, பதற்றத்துடன் விளையாடத் துவங்கியது.
கடைசி நேரத்தில் தடுப்பாட்டக்காரரான நிதின் ராவல், அதிரடியாக விளையாடி, கடைசி நேரங்களில் புள்ளிகளை பெற்றுத் தர, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 24-22 என்ற கணக்கில் வென்றது.
Story first published: Monday, August 21, 2017, 19:21 [IST]
Other articles published on Aug 21, 2017


Click it and Unblock the Notifications