உ.பி.,யோத்தாவுக்கு சொந்த மண்ணில் முதல் வெற்றி
லக்னோ: புரோ கபடி லீக், சீசன் 5 போட்டிகளில், லக்னோவில் நடந்து வரும் போட்டிகளில், உள்ளூர் அணியான உ.பி., யோத்தா, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.தெலுகு டைட்டன்ஸ் அணியை 25-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
புரோ கபடி லீக் 5வது சீசனில் தற்போது லக்னோவில் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், உள்ளூர் அணியான உ.பி.,யோத்தா அணியும், தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதின.

இந்த சீசனில், அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரான உ.பி.,யின் நிதின் தோமரும், தெலுகு டைட்டன்ஸ் அணியின் ரெய்டு மெஷின் ராகுல் சவுத்ரியும் தங்களுடைய அணிக்காக, தலா, ஆறு புள்ளிகளை எடுத்தனர்.
துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும், நிதானமான, தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ராகுல் சவுத்ரி, நிதின் தோமர் மட்டும் புள்ளிகளை எடுத்து, ஸ்கோரை உயர்த்தி வந்தனர்.
முதல் பாதியின் இறுதியில், தெலுகு டைட்டன்ஸ் அணி, 12-10 என முன்னிலையில் இருந்தது.
உள்ளூரில் விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம், உ.பி., யோத்தா அணியினருக்கு இருந்தது.
இரண்டாவது பாதியில், அந்த அணி, மிகவும் வேகமாகவும், விவேகமாகவும் விளையாடியது. போட்டி முடிவடைய, 10 நிமிடங்கள் இருக்கும்போது, உ.பி., யோத்தா மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணியும் விட்டுக் கொடுக்காமல் புள்ளிகளை சேகரித்து வந்தது. ஒரு நிலையில், 20-20 என்று சமநிலை ஏற்பட்டது.
இறுதியில், 25-23 என்ற புள்ளிக் கணக்கில், உ.பி., யோத்தா அணி வென்றது.
Story first published: Friday, August 25, 2017, 22:24 [IST]
Other articles published on Aug 25, 2017


Click it and Unblock the Notifications