மறக்க முடியாத வீரர்
WWE ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வீரர் அண்டர்டேக்கர். கடந்த ஆண்டு ரெஸ்ஸில்மேனியா தொடரில் அவர் தன் கடைசி போட்டியை ஆடி இருந்தார். அத்துடன் அவர் ஓய்வு பெற்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு சிறப்பாக விடை கொடுத்து இருக்கிறது WWE.
30 ஆண்டுகள்
சரியாக அவர் WWE அரங்கில் அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகி உள்ள அதே நாளில், சர்வைவர் சீரிஸ் தொடரை நடத்தி அதன் முடிவில் விடை கொடுத்துள்ளது WWE. அண்டர்டேக்கரின் நண்பர்கள் அவருக்கு இறுதியில் ஒன்று கூடி விடை கொடுத்தனர்.
அறிமுகம்
1990 சர்வைவர் சீரிஸ் தொடரில் தான் அண்டர்டேக்கர் WWE-இல் முதன் முதலில் அறிமுகம் ஆனார். அவரை பயமுறுத்தும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து இருந்தது WWE. அதை மிக சிறப்பாக 30 ஆண்டுகள் கட்டிக் காத்தார் அண்டர்டேக்கர்.
அச்சம் குடி கொள்ளும்
அவர் ரிங்கில் வந்தாலே ரசிகர்களுக்கு அச்சம் குடி கொள்ளும் வகையில் அவர் தன் கதாபாத்திரமகா வாழ்ந்தார். பல மோசமான காயங்களை தாண்டி அவர் WWE-இன் முக்கியமான வீரராக இருந்தார். வயதான நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மிகச் சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
கடைசி போட்டி
2020 ரெஸ்ஸில்மேனியா தொடரில் அவர் ஏஜே ஸ்டைல்ஸ்-க்கு எதிராக தன் கடைசி போட்டியில் ஆடி வெற்றி பெற்று இருந்தார். அதன் பின் அவர் தன் பழைய போட்டிகள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதன் முடிவில் தன் ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
நண்பர்கள்
அவருக்கு சிறப்பான வழியனுப்புதலை திட்டமிட்ட WWE நிர்வாகம் அவர் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆன அதே சர்வைவர் சீரிஸ் தொடரில் அவருக்கு விடை கொடுத்தது. ஷான் மைக்கேல்ஸ், பூக்கர்-டி, ட்ரிப்புள்-எச், கேன், ஷேன் மிக்மேன், பிக் ஷோ, ரிகிஷி, மிக் ஃபோலி, ரிக் ஃபிளேர், கெவின் நாஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அவரை வழியனுப்பி வைக்க வந்தனர்.
ரெஸ்ட் இன் பீஸ்
இறுதியில் பேசிய அண்டர்டேக்கர் "என் நேரம் வந்துவிட்டது. அண்டர்டேக்கர் அமைதியாக உறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது" எனக் கூறி விடை பெற்றார். WWE ரசிகர்கள் அவரது ஓய்வை அடுத்து நெகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.