மோன்டிவிடியோ: போட்டியின்போது, இத்தாலி வீரரை கடித்ததால் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள உருகுவே நாட்டின் லூயிஸ் சுவாரசை வரவேற்க அந்த நாட்டு அதிபர் ஜோஸ் முஜிகா விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, நாங்கள் நல்ல விளையாட்டு வீரரைத்தான் கால்பந்தாட்டத்துக்கு தேர்ந்தெடுத்தோமே தவிர, தத்துவஞானியை அல்ல என்று மோசமான கடிக்கு நியாயம் கற்பித்துள்ளார் அந்த நாட்டு அதிபர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியொன்றில், உருகுவேயும், இத்தாலியும் மோதின. அப்போது இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செய்லியின் தோள்பட்டையில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் கடித்துவிட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய கால்பந்தாட்ட சம்மேளனம், உடனடியாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து சுவாரசை வெளியேற்றுவதுடன் உருகுவே விளையாடும் அடுத்த 9 போட்டிகளில் சுவாரஸ் விளையாட தடை விதித்தது. மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்கு சுவாரஸ் அனைத்து வகையான கால்பந்து போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாகவும், அபராதமாக, 82,190 அமெரிக்க டாலர்கள் கட்ட வேண்டும் என்றும் சுவாரசுக்கு, பிபா உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சுவாரஸ் இன்று விமானம் மூலமாக தாயகம் திரும்பினார். உருகுவே அணியின் முன்னணி வீரர் என்பதால், அவரை வரவேற்க திரளான ரசிகர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கால்பந்தாட்ட வீரரை, அதுவும் போட்டித்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரரை வரவேற்க உருகுவே அதிபரே ஏர்போர்ட்டுக்கு வந்ததுதான்.
ஏர்போர்ட் வந்திருந்த, உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகா கூறுகையில், "உருகுவே அணிக்காக சுவாரஸை தேர்ந்தெடுக்க காரணம் அவர் ஒரு சிறந்த வீரர் என்பது மட்டும்தான். தத்துவ ஞானி என்றோ, மெக்கானிக் என்றோ அல்லது அவரது நன்னடத்தைக்காகவோ சுவாரஸ் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சுவாரஸ் யாரையும் கடித்ததை நான் பார்க்கவில்லை. கால்பந்தாட்டம் என்று வந்தால் வீரர்கள் தங்களுக்குள் தகராறு செய்வது சகஜமானது" என்று தெரிவித்துள்ளார்.