டெல்லி: யுனைடெட் வேர்ல்ட் ரெஸ்லிங் எனப்படும் உலக மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் அரசின் தலையீடு இருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்திய மல்யுத்த வீரர்கள் போரட்டத்தின் பலனாக அதற்கு முன் இருந்த மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அதிகாரிகள் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தேர்தலில் வென்று தலைவரான சஞ்சய் சிங் முந்தைய தலைவருக்கு நெருக்கமானவர் என்பதை சுட்டிக் காட்டி அப்போது மல்யுத்த வீரர்கள் அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து இருந்ததனர்.

அதனால் விளையாட்டு துறை அமைச்சகம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைப்பதாக அறிவித்தது. ஆனால், அந்த அமைப்புதான் அதன் பின்னரும் மல்யுத்த வீரர்களை ஒலிம்பிக் தொடர் உட்பட பல்வேறு தொடர்களுக்கும் தேர்வு செய்தது.
தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டதாக கூறினாலும் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இடையே மல்யுத்த வீரரான சத்தியவர்த் காடியான் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைத்த பின்னர் அவர்கள் எவ்வாறு அணியை தேர்வு செய்ய முடியும் என முறையிட்டு இருந்தார்.
அதன் காரணமாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்க முடியாமல் போனது. நீதிமன்றம் விளக்கம் கோரிய போது விளையாட்டுத் துறை அமைச்சகம் தாங்கள் விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்தது. ஆனால், இதுவரை அது குறித்து எந்த உறுதியான முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இதன் இடையே நீதிமன்றம் நியமித்த தற்காலிக கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரிக்க மறுத்தது. இந்த குழப்பங்களுக்கு இடையே யுனைடெட் வேர்ல்டு ரெஸ்லிங் நடத்தும் கூட்டங்களில் இந்தியா சார்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கடைசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங் பங்கேற்று இருந்தார்.
அது குறித்து யுனைட்டெட் வேர்ல்ட் ரெஸ்லிங் அமைப்பு தற்போது விளக்கத்தையும், எச்சரிக்கையையும் விடுத்து இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்கும் சஞ்சய் சிங் தகவல் தொடர்பாளராக மட்டுமே கருதப்படுவார் என சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும் யுனைடெட் வேர்ல்டு ரெஸ்லிங் விதிகளின்படி ஒரு நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பில் அந்த நாட்டின் அரசு அல்லது அதிகாரிகள் தலையிடக் கூடாது. அந்தக் கூட்டமைப்புக்கு அளிக்கப்படும் நிதியைத் தவிர வேறு உள் விவகாரங்களில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டி எச்சரித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் சர்வதேச அரங்கில் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சகம் விரைவில் ஒரு முடிவை எடுத்து புதிதாக தேர்தலை நடத்த வேண்டும்.