சென்னை : தமிழகத்தை சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு 2023 எல்லோபிரேகாட் ஓபன் செஸ் தொடரில் 2500 செஸ் ரேட்டிங்கை தாண்டி இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். இவர் புகழ்பெற்ற இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் உலகிலேயே செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் உடன்பிறந்த ஜோடி என்ற வரலாற்று சாதனையை வைஷாலி - பிரக்ஞானந்தா செய்துள்ளனர்.
மேலும், வைஷாலி இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு வைஷாலி இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகி இருக்கிறார். இந்திய அளவில் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆகி உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கிராண்ட்மாஸ்டர் ஆன முதல் பெண் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார் வைஷாலி.

வைஷாலி மற்றும் அவரது இளைய சகோதரர் பிரக்ஞானந்தா தான் உலகிலேயே கிராண்ட்மாஸ்டர்களாக இருக்கும் முதல் உடன்பிறந்த ஜோடி. வைஷாலி இப்போது 2501.5 ரேட்டிங் பெற்று பெண்கள் செஸ் தரவரிசையில் உலகிலேயே 11வது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். இதன் மூலம் அவர், 2024 செஸ் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வைஷாலி 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் இவர் சர்வதேச செஸ் மாஸ்டராக (Woman International Master) இருந்து வருகிறார்.
வைஷாலிக்கு முன்னதாக பிரக்ஞானந்தா உலகப் புகழ் பெற்றுவிட்டாலும், அவர் செஸ் ஆடக் காரணமே வைஷாலி தான். ஆம், முதலில் இவர்களின் பெற்றோர் ரமேஷ் பாபு - நாகலட்சுமி மூத்தவரான வைஷாலியை செஸ் பயற்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். அக்கா செஸ் ஆடுவதை பார்த்த பிரக்ஞானந்தா 4 வயதில் இருந்தே அவருடன் செஸ் விளையாடத் துவங்கினார். ஒரு கட்டத்தில் அக்காவை மிஞ்சி கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார்.
பின் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். அவர் இன்னும் சில ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் ஆகும் வாய்ப்பு உள்ளது. அவரது அக்காவும் இப்போது அவருக்கு போட்டியாக வந்துள்ளார்.