இருமுறை உள்தாள் ஒட்டிய நிலையில் காலாவதியாகும் ரேஷன் கார்டுகள்- புதிய குடும்ப அட்டை வழங்கப்படுமா?
நெல்லை: தமிழக மக்களிடம் தற்போது புழக்கத்தி்ல் இருக்கும் குடும்ப அட்டைகள், இந்தாண்டு (2011) இறுதியுடன் காலாவதியாகிறது. அதற்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுமா என்றக் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த வகையில், தமிழகத்தில் தற்போது 1.92 கோடி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அரிசி விருப்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, போலீஸ் அட்டை, எந்த பொருளும் விரும்பாதவர் அட்டை என்பதே. கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த குடும்ப அட்டை கடந்த 2009 உடன் கலாவதியானது.
ஆனால் 2009ம் ஆண்டு, போலி குடும்ப அட்டைகள் கண்டறியும் 100 சதவீதம் சரி பார்ப்பு பணிகள் நடந்தது. இதனால் அப்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்க முடியவில்லை. இதையடுத்து 2010ம் ஆண்டு ஓராண்டுக்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைத்து வழங்கப்பட்டது.
ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்து பொதுமக்கள் பொது வினியோக பொருட்களை பெற்று வந்தனர். பின்னர் 2011ம் ஆண்டிற்கும் கூடுதலாக ஒரு உள்தாள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக உள்தாள் இணைப்பு மூலமே பொது மக்கள் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேசன் கார்டு வழங்கி 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டாவது புதிய ரேசன் கார்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications