பெங்களூர்: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகள் ஒன்று கூடி உலகக் கோப்பையை வெல்ல போராடும். பலவார ஆட்டங்களுக்கு பிறகு ஒரு அணி உலகக் கோப்பையை வெல்லும் தருணம் தான் மிகவும் பெருமையானது.
இந்தியாவை பொறுத்த வரை கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது அல்ல. மாறாக கோடிக்கணக்கான மக்கள் டிவி முன்பு அமர்ந்து கொண்டு எங்கும் செல்லாமல் போட்டிகளை காண்பதால் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல அதையும் தாண்டியது ஆகும்.

கிரிக்கெட் மூலம் நாம் நம் வேற்றுமைகளை மறக்க முடியும் என்றால் அதன் மூலம் சமூகத்திற்கு நல்லதும் செய்ய முடியும் என்று பெங்களூரைச் சேர்ந்த ரங்தே என்கிற அமைப்பு நினைத்தது. அதை மனதில் வைத்து கப் ஆஃப் ஜாய் #CupOfJoy என்கிற பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
கடன் பெற நினைப்பவர்களுக்கு உரிய நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொடுக்கும் என்.ஜி.ஓ. தான் ரங்தே. அதாவது நீங்களும், நானும் ரங்தே அமைப்புக்கு சென்று கடன் வேண்டி நிற்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடன் கொடுக்கலாம். ரூ.100ல் இருந்து கடன் கொடுக்கலாம். இந்த கடன் தொகையை வாங்கியவர்கள் தங்களின் வசதிக்கேற்ப திருப்பிக் கொடுப்பார்கள்.
#CupOfJoy பிரச்சாரம் மிகவும் எளிமையானது. ஒவ்வொரு போட்டி துவங்கும் முன்பு ஒருவர் http://rangde.org/cupofjoy என்ற இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த வீரர் அல்லது அணியை மனதில் வைத்து உறுதிமொழியை எடுக்க வேண்டும். அதாவது உதாரணமாக நீங்கள் விராத் கோஹ்லியை ஆதரிக்க நினைத்தால், கோஹ்லி அடிக்கும் ரன்களை விட 10 மடங்கு அதிகமாக நான் முதலீடு செய்வேன் என்றோ அல்லது கோஹ்லி சதம் அடித்தால் நான் ரூ.1000 முதலீடு செய்வேன் என்றோ நீங்கள் உறுதிமொழி எடுக்கலாம்.
இத்தகையை உறுதிமொழியை எடுப்பதால் ஒரு கிரிக்கெட் ரசிகர் தனக்கு பிடித்த அணி அல்லது வீரர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் சக மனிதர் ஒருவருக்கு கடன் கிடைக்க உதவுகிறார். நாம் வெற்றியை கொண்டாடுகையில் சமூகத்தில் நல்லதை பரப்புவுதன் மூலம் அந்த சந்தோஷம் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.